தீராவெளி

Wednesday, July 26, 2017

முஸ்டீன்----தமிழ் மிரர்-21.12.2016









தமிழ் மிரர்-- 21.12.2016
நேர்கண்டவர் -- முஸ்டீன்
--------------------
படைப்பது என் ஆன்மீகப் பணி
தீரன் ஆர் எம் நௌஷாத்


அமைதியாக இருந்தே கனதியான படைப்புகளைத் தருகின்றீர்கள். உங்கள் படைப்புலகம் பற்றிச் சொல்லுங்கள்?


அமைதியாக இருக்கவில்லை ...அகப்போராட்டத்தில் இருக்கிறேன்... ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை நான் யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்பு,கதா மாந்தர், நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சு, மொழிநடை, உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்,, செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. இதுதான் என் படைப்புலகம் ... உண்மையில் என் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லோருக்கும் அருளப்படுவது கிடையாது.


01. சிறந்த சிறுகதைகள் தருபவராக உங்களைப் பார்க்கின்றோம். உங்கள் கதைப்புலம்குறித்துச் சொல்லுங்கள்?


‘’சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எந்த இலக்கணத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் எழுத்துகள் தாமாகவே சிறுகதை வடிவம் பெற்றுவிடுகின்றன’’. என்கிறார் சுசீந்திரன்... ஆனால் நான் ஒரு கதைத்தந்திரம் வைத்திருக்கிறேன்... அதாவது முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது.. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.;. ''.. சிறுகதை குதிரைப் பந்தயம்போல தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டுமென்று எல்லரி செட்ஜ்விக் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.’’ என இணையத்தளமொன்றில் காணக் கிடைத்தது.. ஆயின் இப்போது இந்த இலக்கணங்களை எல்லாம் தாண்டி சிறுகதை எங்கோ போய்விட்டது... இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்


02. வெள்ளிவிரல் தொகுதி ஒரே மூச்சில் படித்துமுடிக்க வைக்கின்றது, சிறுகதைகள் பற்றிய தங்களின் அபிப்ராயம் என்ன,

ஊரில் பழைய சந்தை வீதியில் இருந்து கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் சஞ்சரிப்பதும் ... பிச்சைக்காரனின் அழுக்குச் சட்டைக்குள் சில்லறை காசாகக் கிடப்பதும் சிறுகதை தரும் விசித்திரமான அனுபவங்கள்தாம்..ஒரு வினாடிக் காலமும் ஒரு சிறுகதையாகலாம் ,,ஒரு ஆயுள்காலம் முழுக்கவும் ஒரு சிறுகதையாகலாம். காலங்களை கடந்து சஞ்சரிப்பது சிறுகதை.. மாபெரிய மகாபாரதக் கதையையும் ஒரு சிறுகதை ஆக்கிவிடலாம்,,சின்னஞ் சிறிய திருக்குறளையும் சிறுகதை ஆக்கிவிடலாம்.. காலங்களாலும், அளவுகளாலும், சம்பவங்களாலும் மட்டுப்படுத்த முடியாதது சிறுகதை.. சிறுகதையின் சூட்சுமக் கயிறு எங்கே இருக்கிறது என்று சுவாரஷ்யமாக ஆராய வைப்பதே ஒரு சிறுகதையின் மர்மக் கவர்ச்சி...


‘’.... வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ,நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு....’’ என்கிறார் சுஜாதா. அதில் நான் உடன்படுகின்றேன்


04.வாசிப்பின் பின்னரான விமர்சனக் குறிப்புகள் அல்லது ரசனைக்குறிப்புகள் பற்றிய தங்களின் அபிப்பிராயம்?

படைப்பது என் ஆன்மீகப் பணி.. விமர்சனங்கள் –எதிர்வினைகள் என்பன என் பணியை செப்பம் செய்பவை. வரவேற்போம் .... ஆயின் ஒரு படைப்பின் மீது காழ்ப்புணர்வோடு செய்யப்படும் எதிர்வாதங்களை நான் கண்டு கொள்வதில்லை.. என் ‘நட்டுமை’ நாவலை விமர்சனம் செய்த ஒரு பெருந்தகை ‘இதில் இன்னின்ன பிழை இருக்கிறது..இதை இப்படியிப்படி சொல்லியிருக்க வேண்டும்.. இதில் இது இதுவெல்லாம் காணப்படவில்லை...” என்று அடுக்கிக் கொண்டே போனார்.. எனக்கென்றால் இது ஒரு கோமாளித்தனமாகவே தென்பட்டது.. நீ சொல்வது போல் ..நீ விரும்புவது போலெல்லாம் எழுதுவதற்கு நான் ஒரு எழுதுவினைஞன் அல்லவே.....நான் ஒரு படைப்பாளி... இந்த மாதிரி இலக்கியச் சண்டித்தனம் செய்தால்....? என் படைப்பில் உன் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது... அன்பரே..!


05.பள்ளிமுனைக்கிரமத்தின் கதை எப்படி கொல்வதெழுதல் 90 ஆக மாறியது?

முஸ்லிம் குரலில் பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் கொஞ்சம் அரசியல் கொஞ்சம் சமூகவியல் என்று ஒரு விவரணம் எழுதி வந்தேன்... அது முடிவடைந்த பிறகு இதை ஒரு முழு நாவலாக ஆக்கலாம் என நண்பர்கள் எம்.பௌசரும், எம்.எம். நூறுல் ஹக்கும் ஒரு ஆலோசனை சொன்னார்கள்... சரி என்று அதை அதே பெயரில் செவ்விதாக்கம் செய்யத் தொடங்கினேன்...


2013 இல்தான் ஒரு முழு நாவலாக இது சாத்தியமானது.. எல்லாம் முடிவடையும் தருணத்தில்தான் ஒரு விஷயம் தெரிய வந்தது... பள்ளிமுனை என்ற பெயரில் மன்னார் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் கிராமம் இருக்கிறது என்று... அதுவரையில் நான் இதை அறிந்திருக்கவில்லை... இக்கதை கிழக்கு முஸ்லிம் ஊர்களில் தளம் கொண்டிருப்பதால் இதே பெயரில் இக்கதை வெளியானால் இது ஒரு சிறிய மொழிவழக்கு மற்றும் கதைத்தளம் என்பவற்றில் ஒரு குழப்பத்தை தரும் என்று நண்பர் நஜீப்கான் அபிப்பிராயப்பட்டார்...


இந்நாவலை நான் என் நன்றிக்கடனாக சு.ரா. அவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன்... இதை அறிந்த ஒரு மூத்த ‘’அறிஞர் பெருமகன்’’ “உன் கதை சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதையின்’ தழுவல் போல எனக் கேட்டு ஒரு நக்கல் வேறு விட்டார்..


இந்தக் குழப்ப நிலைகளின் காரணமாக இந்நாவலின் தலைப்பை நான் மாற்றத் தீர்மானித்து விட்டேன் .... அதே சமயம் இக்கதை காலச்சுவடு நிறுவனத்தினால் அச்சிடப்பட்டுக் கொண்டுமிருந்தது... நூல் இறுதிவடிவம் பெற ஒருசில நாட்களே இருந்த நிலையில் நாவலின் தலைப்பை திடீரென எப்படி மாற்ற..? என்னவென்று மாற்ற...?


ஒரு குழப்ப நிலையில் நான் “திரிந்து” கொண்டிருந்த போதுதான் என் மகள் தன் தவணைப் பரிட்சை முடிவை என்னிடம் காட்டி... வாப்பா.. எனக்கு ‘சொல்வதெழுதுதல்—90.’ ‘’ என்று சொல்லி அறிக்கையைக் காட்டினாள்... அதில் இருந்த சானா (ச ) எனக்கு கானா (க ) போல தெரிந்தது... கொல்வதெழுதல்-90... என்று வாசித்து விட்டேன்.. மகள் “கொல்‘லெனச் சிரிக்க--- எனக்குள் மூளைக்குள் பொறி தட்டி அக்கணத்தில் ‘கொல்வதெழுதுதல்—90.’ என்ற தலைப்பு உற்பத்தியாகிவிட்டது... இதன் சாத்தியப்பாடும் பொருத்தமாகவே இருந்தது... போர் உக்கிரம் பெற்றிருந்த 90 காலப்பகுதியில் ஆளையாள் கொல்வதே வாழ்க்கை என்றாகியிருந்த சூழலில்...இந் நாவலின் தளமும் 1990 காலத்தளம் என்பதால் தலைப்பு ஓரளவு பொருத்தமாகவே ஆகிவிட்டது....


06. பிரதேசத்தில் இருந்த ஆயுத அரசியலையும் ஒரளவு தொட்டதாகத்தான் கொல்வதெழுதல் 90 ஐப் பார்க்க முடிகின்றதே

ஆமாம் ...1990 கள் இலங்கையில் போர் உச்சம் பெற்றிருந்த காலம். நம் நாடு கொலைஞர்களின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது.. இராணுவம்..புலிகள்..ஊர்காவற்படைகள் ..இதர...ஆயுதக் குழுக்கள்..பாதாள உலகக்கோஸ்டிகள்...என்று எல்லோர் கையிலும் ஆயுதம்... ஆயுதங்களே அரசியல் ஆயின....... ஆட்கடத்தல்.. இனக்கலவரம்... கொலை.. கொள்ளை... இனக்கலவரம்.... என்று எங்கும் அராஜகம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலம் அது.... முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனித்துவ அரசியலின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு பாமர மக்கள் வாழும் குக்கிராமங்களில் கூட உணரப்பட்ட காலம் அது ...


அந்த போர்க்கால சூழலில் போர்க்கால இலக்கியங்களே முதன்மை பெற்றிருந்தன... அப்படியான காலப் போர்வையினுள் இப்படியான படைப்புக்கள் வருவது சகஜமே... ஏனென்றால் அதுதானே அக்கால வாழ்க்கை...


07.உங்கள் சூழலில் நிகழ்ந் யுத்தகால ஆயுததாரிகளின் செயற்பாடுகள்பல நாவல் எழுதப் போதுமானவை இருந்தும் ஏன் நீங்கள் மௌனமாக இருக்கின்றீர்கள்,


மௌனமாக இருக்கவில்லை... சிறுகதைகள், கவிதைகள் மூலம் ஆயுததாரிகளின் அட்டகாசங்களை சொல்லியிருக்கிறேன்...1983 களில; நான் நடத்திய “தூது” கவிதை இதழில்.. “இன்னாலில்லாஹி...” என்ற கவிதை தொகுதியில்....’’மீசான் கட்டைகளின் மீள் எழும் பாடல் ..” தொகுப்பில்... “இரண்டாவது பக்கம்’’ இதழில்....’’ சிவந்த பள்ளிகள்’’ தொகுப்பில்.... எத்தனையோ கவிதைகள் எழுதியிருக்கிறேன்... அஷ்-ஷூரா, ஈழநாதம், அல் ஜஸீரா,சரிநிகர் மற்றும் சில சிற்றேடுகளில் இந்த விடயத்தை கருவாய்க் கொண்டு பல சிறுகதைகள்-கவிதைகள் எழுதியிருக்கிறேன்... ‘’கொல்வதெழுதல் 90இல்....சில விடயங்களை சொல்லியிருக்கிறேன்... சாய்ந்தமருது பொதுச் சந்தை குண்டு வெடிப்பு பற்றி தனி ஒரு நாவலே எழுதியிருக்கிறேன்...அது பிரசுரம் பெறாது கைப்பிரதியாக இருக்கிறது....


08. ஒரு தபாலதிபரின் இலக்கியஉலகு பற்றி எமக்குத் தெரியாத பல பக்கங்கள் இருக்குமே?


இருக்காதா பின்னே..? பெற்ற மக்களால் கைவிடப்பட்டு பிச்சைச் சம்பளம் பெற வரும் தாய்மார்கள்... கவனிப்பாரின்றி வார்ட்டுகளில் கிடந்தது நோய் நிவாரணப் பணம் பெற வரும் நோயாளிகள்... தள்ளாத வயதில் உதவுவாரின்றி தன்னந்தனியே வீதிகளில் அல்லாடி வரும் பென்சன்காரர்கள்... தான் சாப்பிடாவிட்டாலும் மகனுக்கு பசிக்கும் என்று சொல்லி தான் பிச்சை எடுத்த காசை அனுப்ப வரும் பாமர ஏழைகள்,,,,

யார் எக்கேடு கேட்டுப் போனாலும் தன் சிபார்சை –ஆணையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தும் அரசியல்காரர்கள்... நேற்றைய நேர்முகப் பரீட்சைக்கு இன்று கடிதம் கேட்டு வரும் இளைஞர்கள்... தன காதலியின் கடிதத்தை பெற்றோருக்கு தெரியாமல் காதலனிடம் கொடுக்கச் சொல்லி அசட்டுச் சிரிப்புடன் வரும் விடலைகள்... எந்தக் கஷ்டம் நமக்கு இருந்தாலும் தன வேலையை முடித்துக் கொண்டு செல்லும் அவசரத்தில் வரும் வர்த்தக பிரமுகர்கள்... எத்தனை வேலைகள் இருந்தாலும் தன “வருடாந்த சோதனையை” செய்து ஆயிரம் பிழை சொல்லி எச்சரிக்கைப் பத்திரிக்கை அனுப்பும் பரிசோதகர்கள்......


ஹர்த்தால்..கடத்தல்..போக்குவரத்தின்மை...நோய்... என்ன காரணம் இருந்தாலும் தபாலகம் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் உயர் அதிகாரிகள்.. .....நெருக்கும் பொதுமக்கள்/.......அப்பப்பா...யாரிடம் கதை இல்லை....யாரிடம் கவிதை இல்லை.....?


09 விருதுகள் பட்டங்கள்....?(சம்பந்தமாக கேட்டால

சங்ககாலம் தொட்டு இலக்கியமும் விருதுகளும் தொடர்புற்றே உள்ளன.. எழுத்துக்காக வழங்கப்படும் விருதுகள் பெறுமதிமிக்கவை.. விருதுக்காக எழுதுபவை செல்லாக்காசுகள்... துரதிர்ஸ்டவசமாக இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் விருதுகளால் முதுகு சொரிந்து கொள்வதைத்தான் தினமும் பார்க்கிறோமே...
என்னிடம் சிலர் அவ்வப்போது வந்து நீங்கள் இப்பகுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்... உங்களுக்கு எமது அமைப்பினால் ஒரு விருது வழங்கவேண்டும்.. என்று உரிய ஒரு படிவமும் தந்து வற்புறுத்துவதுண்டு... இன்னும் சில நிறுவனங்கள் இன்ன விருதுக்கு இவ்வளவு என்று பணம் கேட்கிறார்கள்.. இந்த மாதிரி ஆசாமிகளை கண்டாலே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது...
இதுவரையும் ஒரு விருது,, ஒரு பட்டம் நான் பெறவில்லை..விண்ணப்பிக்கவில்லை..விண்ணப்பப்படிவம் நிரப்பிக் கொடுத்ததில்லை...
என் எழுத்தைப் படிக்கும் ஒரு வாசகர் எனக்கு ‘’மனப்பூர்வமாக’’ சொல்லும் ஒரு சின்னப் பாராட்டுத்தான் எனக்குக் கிடைக்கும் விருது. அதில் நான் மகிழ்கிறேன்.. .


10. உங்ரதேசத்தில் அதிகம் கவனிப்புப் பெறாத சிறுகதை கவிதை நாவல்கள் பற்றிச் சொல்லுங்களேன்

ஒரு தரமான இலக்கியப் பிரதி அதன் சம்பூர்ண உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ இருட்டடிப்புக்களையும் மீறி கவனிப்புப் பெற்றேயாகும். கனதியற்றவை எத்தனை பேர் தூக்கிப் பிடித்த போதிலும் நிலைபேறாகாது.... எமது பிரதேச படைப்புக்கள் அவை படைக்கப்பட்ட அவ்வக் காலப்பகுதியில் கவனிப்புப் பெற்றவைதாம்.. அப்படி கவனிப்புப் பெறாதவை இப்போதும் பேசப்படத் தகாதது என்றாகிவிடும் போது நீங்களும் நானும் எப்படி அது பற்றி இப்போது கவனம் செலுத்துவது...?


ஒரு சில இந்த விதிக்குள் அடங்காதவையாக இருக்ககக் கூடும்.. உதாரணமாக ஆழ்மனதை துளாவும் அகப்பை கொண்டு எழுதும் எஸ். நசீறுதீன் (நச்சு வளையம்-நாவல்) அப்போதும் இப்போதும் சரியான முறையில் பேசப்படவில்லை.. இதற்குக் காரணம் நூலாசிரியர்தான். அவர் இந்நாவலை எழுதி வெளியிட்டு அதன் பெறுபேறுகள் பார்க்க முன்னரே புலம் பெயர்ந்து விட்டார். அதிகமானோர் கைகளில் அது கிடைக்கப் பெறவில்லை....

11. உங்களை ஒரு ஹாஸ்யமான மனிதராக அடையாளப்படுத்தலாமா?

என்னுடைய அடையாள அட்டையில் ராசிக் காரியப்பர் முகம்மது நவ்ஷாத் என்றுதான் இலங்கை அரசாங்கம் என்னை அடையாளப்படுத்திஇருக்கிறது...


12. இளந்தலைமுறைப் படைப்பாளிகள் குறித்த அவதானிப்பும் அபிப்ராயமும்?


இளைய தலைமுறையினருக்கு இருக்கும் வாய்ப்பு வசதிகள் எமக்குக் கிடைக்கவில்லை... விரல் நுனியில் விரியும் இணைய உலகம் அவர்களுக்கானது... என்ன இல்லை இணையத்தில்...? ஒரு படைப்புக்குத் தேவையானால் என்ன ஒரு தகவலையும் அவர்களால் இலகுவில் பெற்றுக் கொள்ள முடிகிறது... முக நூலிலும்- வலைத் தளத்திலும் எவ்வித தணிக்கையும் இன்றி உடனுக்குடன் தம் எழுத்தை அச்சில் பார்க்க முடிகிறது... இதனால் எழுத ஆரம்பித்து மூன்றே மாதங்களில் நூல் ஒன்றை பிரசவிக்க முடிகின்றது...


ஆயின்.., பலரது படைப்புகளின் தரம் பற்றி நல்லபிப்பிராயம் கொள்ள முடியவில்லை... ‘’பாஸ்ட்பூட்’’ போல எல்லா மசாக்களையும் போட்டு ஒரு கொத்து ரொட்டியாக சுடச் சுட மேசைக்கு வந்துவிடுகிறது... சாப்பிட்டு ஜீரணிக்க வேண்டியிருக்கிறது... சில அபிப்பிராயங்களை சொன்னால் “மூத்தவருக்கு பொறாமை “ என்கிறார்கள்... காது கொடுத்துக் கேட்க நேரமில்லாமல் அடுத்த ரொக்கற் தயாராகிவிடுகிறது...


என்றாலும் மேற்படி இணைய வசதிகளைப் பயன்படுத்தி வெகு அபூர்வமாக சில இளையோர் …வித்தியாசமான நல்ல படைப்புகளை தனது கொண்டிருக்கிறார்கள்... புதிய தளங்களை கட்டுகிறார்கள்...என்பதையும் மறுப்பதற்கில்லை...


13. ஓர் இலக்கியவாதி எல்லோருடனும் எத்தகைய உறவைப் பேண வேண்டும்?


‘’......நான் எப்படி வர வேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை வரைந்துகொண்டு அந்த மனிதனை ஆக்குவதிலே நான் ஈடுபட்டிருக்கிறேன். மனித உணர்வை மலர்வித்தல்.. மனித உறவைச் செப்பனிடல்... மனித உறவுக்கு நம்பிக்கையூட்டுதல்.. நலிந்த மனிதனுக்கு இரங்குதல்...அதற்காகப் போராடுதல் ஒரு போர்க்குணங் கொண்டவனாக....சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகின்றேன்.....’’ என்று நம் இலக்கிய குருநாதர் பாவலர் பஸில் காரியப்பர் சொல்வதையே நானும் வழிமொழிகிறேன்...


14. இலக்கியத்தின் பெயரால் ஏற்படும் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் எப்படி எதிர்கொள்ள் வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?


எந்தத் துறையையும் விட இலக்கியத் துறையில்தான் போட்டி-பொறாமை-குத்துவெட்டு-காழ்ப்புணர்வு—காவு கொடுத்தல்-பழிக்குப்பழி –கோஷ்டி மோதல்- காலை வாருதல்-தட்டிப்பணித்தல்- வெட்டிக் கிழித்தல்- கோள் காவுதல்- நக்கல் நையாண்டிகள்- முதுகில் குத்துதல் – எல்லாமே மிக மிக அதிகம்....


மேலும், இலக்கியப் பட்டியல் வியாபாரிகள் சிலர் இருக்கிறார்கள்.. பெத்தம்மா மொழியில் ஒரு சில படைப்பாளிகளையே பட்டியல் இடுவார்கள்..மேடைகளில் முழங்குவார்கள்... இதற்கு சில காரணங்கள் உண்டு.. தான் சார்ந்த ‘கோஷ்டியில்’ இருந்தால் தூக்கிப் பிடிப்பார்கள்... எதிர்க் கோஷ்டியில் இருந்தால் ‘வெட்டி’விடுவார்கள்.. மற்றது புதிய எழுத்துக்களை அவர்கள் படிப்பதில்லை... புதிதாக எழுதுவோரை தெரியாது... எதோ தான் ஒருவரை புகழ்ந்தால்தான் அல்லது பட்டியல் இட்டால்தான் அவனால் பிரபலமாக முடியும் என்று குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்...


எங்கள் பிரதேச எழுத்தாளர் ஒருவர் என்னுடைய ‘நட்டுமை’ நாவல் பற்றி ஒரு “கோள் “ காவிக்கொண்டு தமிழ்நாடு நாகர்கோவிலுக்கு விமானத்தில் பறந்து அந்தக் “கோளை” காலச்சுவடு ஆசிரியரிடம் மூட்டிக் கொடுத்துவிட்டு நிம்மதி கண்டார்....இன்னும் சிலர் பாட்டன் வயதிலும் கூட ‘பின்னவீனத்துவவாதிகளுடன் ‘’ சமரசம் செய்யும் கைங்கரியத்தில் இறங்கி தாமும் தம் வயது மறந்து ‘பாலியல்’ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்... ஹையோ...காலம் இவர்களைக் கடந்து எங்கேயோ போய் விட்டது.... ‘சேவை மூப்பு’ கிழட்டுப் பண்டாரங்களின் எழுத்துக்கள் சீண்டுவாரற்றுக் கிடக்கின்றன.... புதிய எழுத்துக்கள் புதியவர்களால் தேச எல்லைகள் கடந்து கொண்டு செல்லப்பட்டுவிட்டது..

‘’இலக்கியவாதி’’ என்ற அகந்தைக் கிரீடத்தை கழற்றி வைத்து விட்டு மானுடம் மீதான அவாவுகை –அன்பு- சகோதரத்துவம் என்ற பண்புகளை மேற்கொண்டு வாழ்தல்..அல்லது வாழ முயற்சித்தல் வேண்டும். அல்லது தீதுகளை மனதளவிலாவது வெறுத்து வாழுதல் வேண்டும்... இப்படி வாழவே நானும் முயற்சி செய்கிறேன்...


15. இலக்கியத்தில் அநாவசியமான பிரச்சினைகளைத் (unwanted problems) தவிர்த்தல் பற்றி ஐடியா கொடுக்கலாமே?

அநாவசியமான பிரச்சினைகள் என்று நீங்கள் சொன்ன பிறகு அதற்கு ஐடியா கொடுப்பதும்...அனாவசியம்தான் ..


16. தீரன் என்ற படைப்பாளியைப் பற்றி?


தீரன்- ஒரு தவிர்க்க முடியாத தலைவலி. உள்ளிருந்து ஆன்மாவை உசுப்பும் உளவாளி- விஷமிகளின் உலகத்தில் வாழத் தெரியாத ஒரு ஏமாளி—மற்றவர் பார்வையில் ஒரு சின்னக் கோமாளி...சீண்டிவிட்டால் ஒரு எழுத்துப் போராளி..


17. உங்கள் கவிதைகள் ஏன் இன்னும் தொகுப்பாகவில்லை?


2000ஆம் ஆண்டுக்குப் பின் நான் கவிதைகள் என்று அனேகமாக எழுதவில்லை... அதற்கு முன்னர் ஏதோ கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்தேன்... அவற்றை இப்போது பார்க்கும் போது கொஞ்சம் அசட்டுத் தனமாகக் கூட இருக்கிறது... சரிதான்... நம்முடைய அசட்டுத் தனத்தை நாமே காட்சிப்படுத்தி இப்போதைய கவிஞர்களைப் பயமுறுத்தலாகாது என்ற ஒரு நல்லெண்ணத்தில் தொகுப்பாகக முயற்சிக்கவில்லை...


எனினும் பலவருட காலமாக நான் எழுதிய குறும்பா க்கள் ஏராளமாக இருக்கின்றன.. ‘அழித்தாயே., ஆழித்தாயே..!” என்ற சுனாமி பற்றிய ஒரு காவியம் கூட உண்டு,,, இவற்றை தொகுப்பாகக் கொண்டு வர ஒரு உத்தேசம் உண்டு... பயப்படாதீர்கள்...


உங்கள் வானொலி நாடக அனுபவங்களை சொல்லுங்கள்?


வானொலியில் முஸ்லிம் சேவையில் 1985 களில் பல நாடகங்கள் எழுதியிருக்கிறேன்... ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன..வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர்.. வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..!


1985ல் எனது முதல் வானொலி நாடகம் ~’வாக்கு’| முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான் அவர்களின் நெறியாழ்கையில் எழுதியிருக்கின்றேன். கிழக்குப் புற நாட்டார் பாடல்களை வானொலி நாடகங்களில் கலந்து கொடுத்து சில பரீட்சார்த்தங்களை செய்து பார்த்ததுண்டு.. இவற்றில் ~’’ஒரு கிராமத்தின் கவிதை’’| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது..


அகில உலக வானொலி நாடகப் போட்டியில் ~’’காகித உறவுகள்’’| நாடகத்திற்கு தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம் பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~’’விண்மீன் வீடு’’| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையில் நனைந்து இப்போதும் நினைந்து மகிழ்கிறேன்..


நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää ஹ_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.


ஓலிபரப்பாகிய நாடகங்களில் கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~’’முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....’’| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.

18. பிரதேச இலக்கியச் செயற்பாடுகள் பற்றிப் பகிரலாமே


‘’அகர ஆயுதம்’’ அமைப்பினர் பல இலக்கிய நிகழ்வுகளை காத்திரமான முறையில் முன்னெடுத்து வருகிறார்கள்... வடக்கு-கிழக்குக்கு தமிழ்-முஸ்லிம் உறவுக்கு ஒரு இலக்கியப் பாலம் அமைக்கத் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ‘’கல்முனை பாவலர் பண்ணை’’ பல மறைந்த படைப்பாளிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளையும் அவர்களை புதிய படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்யும் ஒரு நல்ல கைங்கரியத்தை மேற்கொண்டு வருகிறார்கள்... ‘’கரவாகு இலக்கியச் சந்தி’’யினர் மாதாந்தம் பற்பல இலக்கிய கூட்டங்களை சளைக்காமல் நடத்தி இலக்கியவாதிகளின் ஒன்று கூடல்களை சாத்தியமாக்கி வருகிறார்கள்.. பட்டாம்பூச்சிகள் பரண் அமைப்பினர் பௌர்ணமி இரவுகளில் "#இலக்கிய #அவரி " என்ற பேரில் மாதாந்த கவியரங்குகளையும் இலக்கிய உரையாடல்களையும் முன்னெடுத்து செயற்படுகின்றனர்.. ‘’அபாபீல்கள் கவிதா வட்டம்’ கவியரங்குகளை நடத்தி வருகிறது... ‘’சமவெளி’’ இணையம் பல வகையான இலக்கிய செயற்பாடுகளுக்காக தன தளத்தை வழங்கிவருகிறது... இப்படி இன்னும் பல அமைப்புகள் உற்சாகமாக இலக்கியச் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது...


19. உங்கள் பால்ய கால இலக்கியச் செயற்பாடுகளுக்கும் இப்போதைய செயற்பாடுகளுக்குமான வேறுபாடுகள்?


பால்ய காலம் இலக்கிய செயற்பாடுகளுக்குரியதல்ல .... எப்படியாவது பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக என்னவோ வெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன்... ஒன்றும் கவைக்குதவாதவை... கதைக்குதவாதவை.. ஒரு சமயத்தில் அந்த ஆர்வம் குறைந்து விடுகிறது...


பின்னர், இடையறாத வாசிப்பு மற்றும் யோசிப்புகளின் பின்னரே சில உள்ளார்ந்த இலக்கிய வெளிச்சம் பரவுகிறது. எழுதினால் அதில் ஒரு கனதி இருக்க வேண்டும்..ஒரு பூரணத்துவம் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு “இலக்கியப்பயம்’ ஏற்பட்டுவிடுகிறது... இப்போதெல்லாம் பத்திரிக்கை-சஞ்சிகைகளுக்கு பெரும்பாலும் நான் எழுதுவதில்லை... ‘படைப்புந்துதல்’ ஏற்பட்டால் எழுதி அதை என் வலைப்பூவில் பதிவேற்றி விட்டு சும்மா இருக்கிறேன்...


இணையத்தில் எனக்கு விருப்பமான பல தமிழ் எழுத்தாளர்களின் வலைப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறேன்... மேலும் சூபித்துவ தமிழ் இலக்கியங்களின் மீதான காதல் அதிகரித்துக் காணப்படுகிறேன்..




No comments:

Post a Comment