தீராவெளி

Sunday, November 6, 2022

சமம்..நூல் வெளியீடு





அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,/வணக்கம்

உருவகக் கதைகளை நோக்கிய ஒரு வழிகாட்டற் குறிப்பு

என்னும் பொருளில் செங்கதிரோன் த.கோபாலாலகிருஷ்ணனின் சமம் என்ற உருவகக்கதை நூல் பற்றிய ஓர் கலந்துரையாடல்,

2022.11.05
சனி
காலை 9.30 மணிக்கு

செங்கதிரோன்
த.கோபாலகிருஷ்ணன்
ஏ. பீர்முகம்மது
சிராஜ் மஹ்ஷூர்

ஆகியோரின் பங்கு பற்றுதலுடன்,


சாய்ந்தமருதில், என் இல்லத்தில் நிகழ்த்த உள்ளோம்.

குறிப்பிட்ட சிலருக்கே இந்த பிரத்தியேக அழைப்பை விடுக்கின்றோம்..

கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இவ்வண்ணம்

அபாபீல்கள் கவிதா வட்டம்
தீரன்/உவைஸ் முஹமட்


சிராஜ் மஸ்ஹூர் 


'செங்கதிரோன்' த.கோபாலகிருஷ்ணன் எழுதி, சமீபத்தில் வெளியிட்ட 'சமம்' உருவகக் கதைகள் பற்றிய கலந்துரையாடலொன்று, நேற்று சனி (05.11.2022) காலை சாய்ந்தமருதிலுள்ள தீரன் R.M. Nowsaath இன் இல்லத்தில் இடம்பெற்றது.

அபாபீல்கள் கவிதா வட்டம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சாய்ந்தமருதைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர் கலாபூஷணம் யூ.எல்.ஆதம்பாவாவை நினைவுகூரும் அரங்கில் இது இடம்பெற்றது. 'நாங்கள் மனித இனம்' என்ற அவரது உருவகக் கதை நூல் பற்றியும் இதன்போது பேசினோம்.

எழுத்தாளர் ஏ.பீர்முகம்மது இதற்குத் தலைமை வகித்தார். பொதுவாக உருவகக் கதைகள் குறித்தும், எழுத்தாளர் யூ.எல்.ஆதம்பாவா குறித்தும், 'சமம்' குறித்தும் செங்கதிரோன் பற்றியும் தலைமையுரையில் பேசினார்.

பெரிய மீன் சிறிய மீன் என்ற ரஷ்ய உருவகக் கதை, எப்படி பலராலும்  வெவ்வேறு உருவகக் கதைகளாக வளர்த்தெடுக்கப்பட்டன என்பதை அழகாக உதாரணம் காட்டிப் பேசினார். 
உருவகக் கதையும் நீதிக் கதையும் வேறுபடும் விதத்தையும் அழகுற விளக்கினார்.

அதன் பின்னர் 'சமம்' குறித்தும் உருவகக் கதைகள் குறித்தும் பேசினேன். வல்லிக்கண்ணன் , எஸ். முத்துமீரான் போன்றோரின் உருவகக் கதைகள் குறித்தும் கதைத்தோம்.

விபுலானந்த அடிகளின் சமூக நல்லிணக்கப் பரிமாணம் குறித்தும், அவரது பன்முக ஆளுமையை மக்கள்மயப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினேன்.

அடுத்து நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொறியியலாளர் செங்கதிரோன் பேசினார். நூலாசிரியர் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகிறார். தனது கதைகள் குறித்தும் சமூக உறவுகள் குறித்தும் சிறப்பாகக் கருத்துரைத்தார்.

அதனையடுத்து தில்லை அறிவாலயத்திற்கு, செங்கதிரோனின் நூல்கள் கையளிக்கப்பட்டன. அவற்றை கதன் காரையன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. வந்திருந்தோர் அதில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

நிகழ்வின் நிறைவில்

1.உருவகக் கதைகள் பற்றிய தெளிவு கிடைத்தது. உருவகக் கதைகளை எழுதும் ஆர்வமும் பலரில் வெளிப்பட்டது.

2.மாணவர் மத்தியில் இந்த நூலைக் கொண்டு சென்று சேர்ப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

3.உருவகக் கதை நூலுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பதன் முக்கியத்துவம்  சுட்டிக்காட்டப்பட்டது.

4.சற்று இடைவெளிக்குப் பிறகு, சாய்ந்தமருதில் இலக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது பற்றியும் குறிப்பிடப்பட்டது.

5.விபுலானந்த அடிகள் பற்றிய புதிய தகவல்கள் பரிமாறப்பட்டன.

6.நூல்களை சந்தைப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

மொத்தத்தில் மனநிறைவான நிகழ்வாக அமைந்திருந்தது. ஏற்பாட்டாளர்களான ஏ.பீர் முகம்மது மற்றும் தீரன் நௌஷாட் ஆகியோருக்கு நன்றிகள்.

"எளிமையாக, செலவுச் சிக்கனத்தோடு இலக்கியக் கூட்டமொன்றை நடத்தலாம் என்பதை செய்து காட்ட வேண்டும்" என்று பீர் முகம்மது சேர் பேசும்போது குறிப்பிட்டார். அதற்கு நல்ல உதாரணமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

'சமம்' நூல் குறித்தும் அதிலுள்ள கதைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டது. 

"பொத்துவிலில் நடைபெற்ற வெளியீட்டு விழா திருப்தி தந்தது. என்றாலும், இந்தக் கலந்துரையாடல் அதைவிடத் திருப்தியாக இருந்தது" என்ற நூலாசிரியரின் கருத்து மனங்கொள்ளத் தக்கது.

பத்துப் பேர்தான் வந்திருந்தார்கள். கலந்து கொண்ட எல்லோருக்கும் அதே மனநிறைவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: நண்பர் காரையன் கதன்.



காரையன் கதன்

அபாபீல்கள் கவிதா வட்டம் ஏற்பாடு செய்த த.கோபாலகிருஷ்ணன் அவர்களின் சமம் (உருவகக் கதைகள் ) அறிமுகமும்
உருவகக் கதைகள் நோக்கிய ஒரு வழிகாட்டல் குறிப்பு நிகழ்வு இன்று தீரன் அவர்களின் இல்லத்தில் மர்ஹீம் கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா நினைவிரங்கில் மிகவும் மனதுக்குப் பிடித்தால் போல சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வின் போது தில்லை அறிவாலயத்திற்கும் கோபாலகிருஷ்ணன் அவர்களால் அவரது படைப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.


மூர்ஷித்

செங்கதிரோன் எனும் மூத்த கலை, இலக்கிய மற்றும் சமூக  செயற்பாட்டாளர் த.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "சமம்" எனும் உருவகக் கதைகள் நூலின் அறிமுக நிகழ்வும் கருத்தாடலும்  அபாபீல்கள் கவிதா வட்டத்தின் ஏற்பாட்டில் மூத்த எழுத்துச் செயற்பாட்டாளர் தீரன் ஆர்.எம். நெளசாட் அவர்களின் இல்லத்தில் மர்ஹூம் கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா அரங்கில் நேற்று (5) இடம்பெற்றது. 

மூத்த எழுத்துச் செயற்பாட்டாளர் பீர்முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆய்வாளர், செயற்பாட்டாளர் சிராஜ் மசூர் அவர்கள் சிறப்புரையாற்றியதோடு, வருகைதந்த அனைவரும் பல்வேறு பரப்புக்களில் தங்களது கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர். 

இதன்போது செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு, தமிழ் மொழிச் சமூகமான தமிழ்-முஸ்லிம் மக்களின் நல்லுறவு மற்றும் அதற்காக உழைத்த சுவாமி விபுலானந்தர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புக்கள், வாசிப்புக் கலாச்சாரத்தினை பரவலாக்கவேண்டியதன் அவசியம் மற்றும் உருவகக்கதைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் என்னால் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தது.

இந்நிகழ்வில் தில்லை அறிவாலயத்திற்கு த.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அவரது படைப்புக்கள் அடங்கிய நூல்களின் தொகுதி அதன் பிரதம செயற்பாட்டாளர் காரையன் கதன்   அவர்களிடத்தில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#முர்ஷித்